பசிக்குது
என்ற வார்த்தைக்கு
மதிய வேளையில்
பதில் சொல்ல முடியாமல்
தவித்த தாய்மையின் வேதனை
தன் பெண்மையை
விற்க விரும்பாத
தன்மானகாரி...
சாலையின் ஓரத்தில்
கிடக்கும் பிளாஸ்டிக்
பாட்டில்களை பொறுப்புடன்
எடுத்து முதுகில்
சுமக்கிறாள்...
பாரதியின் சிலையருகே
அவர்களின் வாழ்வு...
கணவனின் வாழ்வோ
மாதுவின் அணைப்பை தேடி
மதுகோப்பையுடன் அலைந்த
சாலையில் முடிந்தது..
ஏழையாக இருந்ததால்
ஜாதியும் மதமும் கூட ஏனோ
உதவிக்கு வரவில்லை...
கூடாரத்தின் சற்று தொலைவில்
மணிக்கு ஓர் முறை
நம்பிக்கை பரப்பும் ஆலயத்தின்
தயவில் பகட்டான காரில்
வலம் மதகுரு ஏனோ...
இவர்களுக்கு மட்டும்...
உதவி செய்யவில்லையா..... அல்லது
உதவுவதற்கு மனமில்லையா...
பணத்தை கொடுத்தவருக்கு
கிடைக்கும் நம்பிக்கை
வாக்கும்... ஆசீர்வாதமும்
இவர்களுக்கு கிடையாது போல...
இறைவனுக்கு மாத்திரமே
உண்மைகள் தெரியும்...
பத்து ரூபாய் ரொட்டியை
வாங்கி மகனுக்கும் மகளுக்கும்
தனது அன்றைய தினத்தின்
சொத்தை பாசத்தின் மிகுதியில்
பிரித்து கொடுத்தாள்...
அவளின் கிழிந்த சேலையில்
திமிறிய இளமையை
பருகிட துடிக்கும் கழுகுகள்
முன்னால் கற்புடன் வாழவே
குப்பைகள் பொறுக்கும்
ரோஷமான கோபக்காரி அந்த
குப்பைக்காரி....
No comments:
Post a Comment