கிராமத்து வாழ்க்கை என்றுமே பட்டணத்தில் இருக்கும் மனிதருக்கு புரிவதில்லை..
படிப்பும் நுனி நாக்கு ஆங்கிலம் மற்றும் எப்போதும் சிரித்தபடி மனதிற்குள் கோபத்தை புதைக்கும் தன்மை கிராமத்து மனிதருக்கு மிகவும் அரிது.
மனதில் தோன்றும் எண்ணத்தை வார்த்தையில் வெளிப்படுத்த மட்டுமே தெரிந்த அப்பாவிகள்..
பிறரை பற்றிய விமர்சனங்களை உடனுக்குடன் சொல்லும் தைரியம் அவர்களுக்கு அதிகமே.
ஏனென்றால் மனசாட்சிக்கு மட்டுமே பயந்து வாழப்பழகிய கிராமம்.
இங்கு எல்லைப்புறத்தில் இருக்கும் தெய்வம் எப்போதும் தன் செயலை கண்காணித்து கொண்டு இருக்கிறது அதற்கு எல்லாம் தெரியும் என்ற நம்பிக்கை தான் கிராமத்தின் ஆணிவேர்...
தென்கரை மகாராஜாவும், முனியாண்டி, சுடலை, பேச்சியம்மன்,சொரிமுத்து அய்யனாரும், பட்டவராயனும், சங்கிலி கருப்பனும் குடும்பகாவல் என்ற பக்தி, இவர்களால் பயன் அடைந்தவருக்கு மட்டுமே தெரியும்..
கடல் கடந்து சென்றாலும்,
"அப்பா,கருப்பா உன்னை நம்பித்தான் போறேன். எனக்கும் குடும்பத்துக்கு நீயே துணை ".. என்று வேண்டி செல்பவருக்கு அவர் காட்சி கொடுத்த கதை ஏராளம்...
செய்யாத தவறுக்கு குற்றம் சாட்டப்பட்டு அவமானம் அடையும் சூழல்களிலும்..கொடுத்த வாக்கை காப்பாற்ற தவறிய போதும்.
அவரின்இடம் சென்று, நான் எந்த தவறும் செய்யவில்லை...
எனக்கு நீயே வழிகாட்டி என்று நெடுஞ்சாண் கிடையா விழுந்து வணங்கி வருவது..
பத்து ரூபாய் கீழே கிடந்தால் எடுத்து பிள்ளையார் காசு என உண்டியல் போடும் குழந்தை மனம் தான் இவர்களின் பிள்ளை மனம்..
உண்மை பேசும் மனிதருக்கு காவல் தெய்வங்கள் கண்டு பயம் வருவதில்லை.மாறாக பக்தியே மேலோங்கி நிற்கிறது...
நான் தவறு செய்து இருந்தால் சொல்லு என்று தெய்வத்திடமே வாதிடும் வழக்கம் வரை இந்த கிராமத்து வாழ்க்கை..
அவர்களுக்கு புரிவதில்லை..