கரியும் கூட
வெட்கத்தில்
சிவந்து விடும்..
இந்த கருவாச்சியின்
முகத்தை கண்டால்...
ஆனால் கண்ணின் நிறமோ
வெள்ளை மீன் நடுவில்
துள்ளி விளையாடும்
மாநிற கோலிக்குண்டு...
செவ்வாயும் வெள்ளியும்
பட்டுச் சேலைகட்டி தங்கதாலியில்
மின்னுகிறாள் முகத்திலே
எந்தவொரு சலனமுமில்லை
ஆயினும் சஞ்சலத்துடன்
வந்தவரை வாரியணைத்து
அருளென்னும் முத்தமிட்டு
அனுப்புகிறாள்... இந்த பாசக்கார
கருவாச்சி... ஊருக்கு எப்போதும்
இவளே தான் காவல் தெய்வம்...
பக்கத்தில் புருஷன் இருக்கும்
பெருமிதத்துடனே வந்தவருக்கு
எல்லாம் வாரி வழங்குகிறார்
அந்த புன்னகை சிரிப்புடன்
கற்சிலை மேனி கண்டே
மதிமயங்கி கண்ணீர் பெருகி...
தாயே நீயே துணை என்னும்
சரண கோஷம் கோவில் சுவரில்
பட்டு எதிரொலித்தது... ஆயினும்
அவளோ சிங்கப்பல் காட்டி
சினத்தையும் சீற்றத்தையும்
சிரித்தே அடக்குகிறாள்...
சிம்மத்தின் மீதே அமர்ந்து
சிறப்புடன் வாழுந்திடவே வழியை
மொழியாக தந்து விட்டாள்...
மன்னாதி மன்னவரின்....
வியாபாரத்தின் பெரு முதலைகளும்
பூனைக்குட்டி போல கைகட்டி
வாயை பொத்தி கரம் குவித்து
பக்தனாய் நடுங்குகின்றான்...
தாயே காப்பாத்து நீ துணையென்று..
லஞ்சத்திற்கு மயங்குவாளா????
லட்சியத்திற்கு துணைபுரியும்
லட்சுமியின் மறுவடிவம்..
இந்த பரமனின் வீட்டுக்காரி
என்றுமே பாசத்திற்கு மாத்திரமே மயங்கிடும் பரமனின் வீட்டுக்காரி... தூரத்தில் நடந்து வரும் ஏழை பக்தனின்
வரவிற்காக காத்திருந்து அவனையும் குபேரானாக மாற்றியே
ஏழைக்கு உதவ வைத்தாள்
இந்த பரமனின் பாசக்கார வீட்டுக்காரி
தேவியை கண்ணார கண்டு
வணங்கிடவே கூட்டத்தின் வரிசையில் நின்று கொண்டு புலம்புகிறான்
அந்த ஏழை பக்தன்...
கையிலே காசுமில்லை...
நெஞ்சிலே சூதுவாது ஏதுமில்லை
படிப்பும் மண்டையில் இல்லை...
நடிப்போ வாழ்க்கையில் இல்லை...
உன்னை தானே நம்பி வாறேன்...
காசு பணம் கேட்கலையே...நீ
காட்டும் பாசம் போதும்...
வேஷக்கார உலகத்திலே...
நானும் கூட இப்போ பட்டினி விரதமிருந்து
பக்தியின்னு சொல்லிகிட்டு
மடிப்பிச்சை ஏந்திய அந்த
காசுல தானே
வேஷத்தை கட்டி வாறேன்...
உன்மீது பாரம் போட்டு
நல்வாக்கு சொல்லிப்புட்டேன்
அத்தனையும் நடத்திவை
எனது உயிரே மகமாயி...
எல்லாரையும் வாழவை...
நீ பேசும் பேச்சை எப்படித்தான்
புரிய வைப்பேன்...
சன்யாசி வேஷத்தை கலைச்சு
போட்டு பெரிய குடும்பியாக...
மாத்தி போட்டாயே...
வழிப்பாதை காட்டுவாயோ....
கடைக்கண் காட்டுவாயோ...
கண்ணீர் பெருக்குடனே....
பக்கத்தில் புதுபொண்டாட்டி
மஞ்சளுக்கு போட்டி போட்டு அவ
கழுத்திலே மஞ்சளில் தாலி....
தலைக்கு மேலே கைகூப்பி
விம்மி விம்மி அழுதுகொண்டே
உன்னை தானே நம்பி வந்தேன்...
சத்தமாய் கோஷமிட்டான்....
தாயே நீயே துணை...
கருவாச்சி ...தாயே...
கருவாகி வாயேன்...
வம்சம் வளர்ந்திடவே...
மங்களமும் பெருகிடவே...
விரைந்து நீ வந்திடம்மா...
பிறக்கும் போகும் குழந்தைக்கும்
ஏழு ஏழு தலைமுறைக்கும்
காவலாய் வந்திடம்மா....
ஏழைகளை காத்திடும்...
இனியவளே.... எங்க குல மகமாயி
காளி நீ தானே...
கனியமுதும் நீ தானே
குலசை முத்தாரம்மா...
தூரத்தில் பாட்டு சத்தம்
ஓங்கியே ஓலித்தது...
சிவாஜியின் படப்பாடல்...
அம்பிகையே ஈஸ்வரியே
எம்மை ஆளவந்து கோவில்
கொண்ட குங்குமகாரி...
No comments:
Post a Comment